எனக்காய் பிறந்த,
பரிசு கேட்டாய்!
உதட்டின் ஈரம் துடைத்து,
ஒய்யாரமாய் ஒரு முத்தமிட்டேன்.
ஆசையாய் கிடைத்த பரிசு என்றாலும்,
அரிதான பரிசொன்று
வேண்டுமென கேட்டாய்!
அன்றே பூத்த மலரொன்றை
பறித்து - ஏன் அன்பு காதலியே
உனக்கான மலர் என்றேன்.
எழிலாய் மலர்ந்த மலரென்றாலும்
எனக்காய் பூத்த மலரில்லை என்றாய்!
உனக்காய் ஒரு சேலை நெய்து,
உறவாடி அணைத்தேன்.
அன்பின் சுகந்தமுண்டு,
ஆனால் ஆடையொன்றும்
அதிசயமில்லை!
அக்கணத்தில் தூறிய மழைத் துளியை
சேகரித்து,
அன்பின் மழையாய் பொழிந்திட்டேன்.
தேகம் குளிர நீராடி
தேவன் தந்த பரிசு இது,
உனது எங்கே என்றாய்?
முயன்று தோற்ற செய்தி எல்லாம்,
முகம் சிணுங்கி எழுத்திலிட்டேன்.
எனக்காய் பிறந்த கவிதையடா இது!
இதுவல்லவோ எனக்கான பரிசு என்றாய்............